
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அடிப்படை மனித உரிமைகள் மீறல் எனவும் இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு எஸ்.துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் த சில்வா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.