குற்றப்புலனாய்வு திணைக்களத்தையும் அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்துகிறது - தயாசிறி !


பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விடுவிப்பினால் தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் காணப்படுமாயின், அது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைமுக பிரதி அமைச்சர் ஆகியோரை விசாரியுங்கள். அதை விடுத்து எம்மை விசாரிக்காதீர்கள். குற்றப்புலனாய்வு திணைக்களத்தையும் அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற அமர்வின்போது சிறப்புரிமை தொடர்பில் கேள்வியெழுப்பி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்ட விடயங்களுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்காக அழைக்கப்பட்டேன். எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, சித்ரால பெர்னாண்டோ, முஜிபூர் ரஹ்மான் ஆகியோரும் இவ்விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

ஊடக சந்திப்பில் குறிப்பிடும் விடயங்களை குற்றவியல் குற்றமாக கருதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைகளை மேற்கொள்வதாயின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுரிமை எந்தளவுக்கு அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்பதை அவதானிக்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ, ஊடக சந்திப்பை நடத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கவில்லை. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட விடயத்துக்காகவே இவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றார்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் பல விடயங்களை குறிப்பிட்டார்கள். இவ்விடயத்தில் தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் காணப்படுமாயின் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆகியோரை விசாரியுங்கள். அதனை விடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தை அரசியல்மயப்படுத்தி எம்மை விசாரிக்காதீர்கள் என்றார்.