அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அத்துரலியே ரத்தன தேரர் இன்“றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்துரலியே ரத்தன தேரரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் மற்றும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்க பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் வேதனிகம விலமதிஸ்ஸ தேரரை கடத்திச் சென்று மிரட்டிய சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரை கைதுசெய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்ததால் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஆஜராகியதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.