ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஓரங்கட்டப்படுவதை ஏற்க முடியாது - சஜித் பிரேமதாச



பல ஆண்டுகளாக, நமது நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி சிறந்த சேவைகளை ஆற்றினர். ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தற்போது ஓரங்கட்டப்படுவதை ஏற்க முடியாது எனத் தெரிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இவர்களை நீதிமன்ற தீர்ப்பின்படி, 3 ஆண்டுகளுக்குள் பட்டபின் டிப்ளோமாவை தொடரும் வரை, தரம் 2.2 பயிலுநர் ஆசிரியர்களாக உள்வாங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக இணைத்துக்கொள்ளக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக 28 நாட்களுக்கும் மேலாக முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்ட இடத்துக்கு இன்று (9) சஜித் பிரேமதாச விஜயம் செய்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்ததையடுத்து, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்கு மோதல்களை விடுத்து, பதில்களும் தீர்வுகளுமே தேவையாக காணப்படுகின்றன. பல ஆண்டுகளாக, நமது நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி சிறந்த சேவைகளை ஆற்றினர். இவர்களுக்கு வழங்கவேண்டிய தீர்வு குறித்து நீதிமன்றத்தில் மத்தியஸ்த தீர்ப்பு எட்டப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின்படி, 3 ஆண்டுகளுக்குள் பட்டபின் டிப்ளோமாவை தொடரும் வரை தரம் 2.2 பயிலுநர் ஆசிரியர்களாக இவர்களை உள்வாங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், இன்று அது நடக்கவில்லை.

தேர்தல் காலங்களில் வந்து எம் மத்தியில் பல வாக்குறுதிகளை வழங்குவது வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்கா என்று இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று கேள்வி எழுப்புகின்றனர். இவர்களுக்கு உடனடியாக தீர்வொன்றை வழங்க வேண்டும்.

ஆசிரியர் வெற்றிடங்கள் இல்லை என்று அரசாங்கத்தால் கூற முடியாது. சுமார் 35,000 பட்டதாரி வெற்றிடங்கள் உட்பட சுமார் 50,000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

பல வருடங்களாக அர்ப்பணிப்போடு பணியாற்றிய இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்குப் பிறகு ஓரங்கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

அரசாங்கத்திற்கு மனச்சாட்சி இல்லையா என்று கேள்வி எழுப்புகிறோம். இந்த 16,600 பேரின் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள். மேலும் குழுக்களை நியமிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.