மட்டக்களப்பில் போலி அனுமதி பத்திரத்துடன் மணல் ஏற்றி சென்ற இருவர் கைது



மட்டக்களப்பு வவுணதீவில் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்திலிருந்து போலி அனுமதிபத்திரத்தை பயன்படுத்தி உழவு இயந்திரத்தின் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கொழும்பு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவினர் வெள்ளிக்கிழமை (17) கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுணதீவு பிரதேசத்தில் வீதியால் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்தி அனுமதிப்பத்திரத்தை சோதனை செய்தனர்.

இதன்போது அவர்களிடமிருந்த அனுமதி பத்திரம் போலியானது என்பதை கண்டறிந்த அதிகாரிகள், சந்தேக நபர்கள் மேலும் ஆறு போலி அனுமதிபத்திரத்தை போலியாக பூர்த்தி செய்து சட்டவிரோதமாக மணல் அகழ்வு பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதேவேளை வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்தி சோதனையின் போது போலியாக தயாரித்த அனுமதிப்பத்திரம் என கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து முதலாவது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்ட போது போலியாக தயாரித்த அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றி சென்றுள்ளமை தெரியவந்தமையையடுத்து சாரதியை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலி அனுமதிபத்திரம் மற்றும் இரு உழவு இயந்திரங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.