பேச்சுத்திறனற்ற இளம்பெண் ஒருவரை நள்ளிரவு வேளையில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் ஊர்காவற்றுற்றை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய, பேச்சுத்திறனற்ற பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (14) நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 27ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதையடுத்து குறித்த பெண்ணின் உறவினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொலிசாரின் நடவடிக்கைக்குள் சிக்காமல் சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய கொன்சபத்து அதிகாரியான ஹரிதாஸ் தலைமையிலான அணியினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, இன்று (15) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.