ஓட்டமாவடி - நாவலடியில் கார் விபத்து; வயோதிபர் பலி !


ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று (8) புதன்கிழமை ஓட்டமாவடி - நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக வைத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து வயல் வேலைக்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது அவ்வீதியால் வந்த கார் மோதியதில் வயோதிபர் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் மரணமடைந்த நபர் ஓட்டமாவடி - 1 மர்கஸ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.