தூண்டிலில் மீன் பிடித்த இளைஞர் குளத்தில் மூழ்கி பலி !


இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, விளான் பகுதியைச் சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மூன்று இளைஞர்கள் 8ஆம் திகதி திங்கட்கிழமை மாலை குறித்த குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க சென்றனர். இதன்போது குறித்த இளைஞன் தூண்டிலை குளத்தில் வீசியவேளை தூண்டில் முழுவதுமாக குளத்தில் விழுந்தது.

இதன்போது குறித்த இளைஞன் தூண்டிலை எடுப்பதற்கு குளத்தில் இறங்கியவேளை நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்றுவதற்கு முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

இன்று காலை கே.கே.எஸ் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.