இயற்கையை வழிபட்ட பிறகு மாடுகளை வழிபட்டு, அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
இந்த நாளில் இந்த ஆண்டு என்ன சிறப்பு உள்ளது, எந்த நேரத்தில் மாட்டுக்கு பொங்கல் வைத்து, வழிபாடு நடத்த வேண்டும், மாட்டுப் பொங்கல் அன்று எப்படி வழிபட வேண்டும் என தெரிந்து கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளில் கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கலாகும்.
வீட்டை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை வெளியேற்றும் போகி பண்டிகையுடன் துவங்கும் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளும், முக்கிய நாளுமான தைத் திருநாளன்று விவசாயத்திற்கு அருள் செய்யும் சூரிய பகவானை வழிபட வேண்டும்.
அதைத் தொடர்ந்து மூன்றாவது நாளில் உழவுத் தொழிலில் விவசாயிகளுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. விவசாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பசுக்கள், காளைகளுக்கு நன்றி செலுத்துவதே மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் இன்று (16) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் மாடுகளை குளிக்க வைத்து, அதன் கொம்புகளுக்கு அழகாக வண்ணம் தீட்டி, மாலைகள் அணிவித்து, மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, அங்கு பொங்கலிடுவார்கள்.
பொங்கல், சுண்டல், பழங்கள் போன்றவற்றை மாட்டிற்கு படைத்து, வழிபடுவார்கள்.
மாட்டிற்கு சர்க்கரை பொங்கலுடன், வெல்லம் கலந்த அரிசி, வாழைப்பழம் ஆகியவை சாப்பிடக் கொடுப்பது நல்லது.
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் :
காலை 09.10 மணி முதல் 10.20 மணி வரை
பகல் 12 மணி முதல் 01.30 மணி வரை
மாலை 6 மணிக்கு மேல்
வீட்டில் மாடு இல்லாதவர்களும், மாடு இருப்பவர்களும் இந்த நாளில் வீட்டில் முன்னோர்களை வழிபடுவது சிறப்பு.
இந்த நாளில் முன்னோர்களுக்கு வேட்டி, புடவை, துண்டு ஆகியவை வாங்கி வைத்து, பலவிதமான காய்கறிகள் கலந்து சமைத்தோ அல்லது முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்தோ வழிபடலாம்.
முன்னோர்களுக்கு படைத்த உடைகளை யாருக்காவது தானமாக அளிக்கலாம். இந்த நாளில் யாராவது இரண்டு பேருக்காவது அன்னதானம் வழங்குவது மிகப் பெரிய புண்ணிய பலனையும், லட்சுமி கடாட்சத்தையும் தரும்.
அருகில் உள்ள கோ சாலைக்கு சென்று அங்குள்ள மாடுகளுக்கு கீரை, புல் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுப்பதும் நல்லது.
மாலையில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று நந்தி தேவரை வழிபடுவது சிறப்பு.
நந்தி பகவானுக்கு அருகம்புல் சாற்றி, விளக்கேற்றி வழிபடலாம். நந்தி பகவானுக்குரிய மந்திரங்கள், நந்தி பகவான் 108 போற்றி துதிகளை சொல்லி வழிபடலாம்.
இதனால் நந்தியின் அருளும், சிவ பெருமானின் அருளும் கிடைக்கும். இந்த ஆண்டு மாட்டுப் பொங்கலான இன்று, பிரதோஷமும் இணைந்து வருகிறது.
இது கூடுதல் சிறப்பானதாகும். சிவ வழிபாட்டிற்கும், நந்தி வழிபாட்டிற்கும் உரிய பிரதோஷம் விரதம், மாட்டுப் பொங்கல் தினத்திலும், சுக்கிரன் மற்றும் மகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக்கிழமையிலும் இணைந்து வருவது மிகவும் சிறப்பானதாகும்.




.jpg)





.jpeg)


