வெளிநாட்டு ரிவோல்வர் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் இருவர் கைது !


வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் தெற்கு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (17) மதிய வேளையில் மருதானை, பட்டியாவத்தை பகுதியில் குறித்த பணியகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, 2 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இவர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மற்றுமொரு நபரிடம் தோட்டாக்களை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, மற்றுமொரு சந்தேகநபரும் அதே பணியகத்தினால் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 9mm ரகத்தைச் சேர்ந்த 75 தோட்டாக்களும், T56 ரகத்தைச் சேர்ந்த 45 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

32 வயதுடைய இந்தச் சந்தேகநபரும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்தவராவார். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.