கொ லை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் 6 மதத்திற்கு பின்னர் கைது !


யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் நபர் ஒருவரை வெட்டி கொலை செய்ததுடன் , நால்வருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் ஒருவர் சுமார் 06 மாத கால பகுதியின் பின்னர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற கத்தி குத்து தாக்குதலில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 40 வயதுடைய அற்புதராசா அகிலன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

தாக்குதல் சம்பவத்தினை தடுக்க முற்பட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் தாக்குதலாளிகள் தாக்குதலை மேற்கொண்டதில் அவர்களும் படுகாயமடைந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை அடையாளம் கண்டு , அவர்களை கைது செய்வதற்கான நடவாடிக்கைகளை முன்னெடுத்த வேளை நால்வரும் தலைமறைவாகியிருந்தனர்.

தலைமறைவானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்ட வேளை, சந்தேகநபர்களில் ஒருவர் முல்லைத்தீவு காட்டு பகுதியை அண்மித்த பகுதியில் நடமாடுவதாக அறிந்து , அங்கு விரைந்த பொலிஸார் கடந்த செப்டெம்பர் மாதம் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் ,06 மாத கால பகுதிக்கு பின்னர் மற்றுமொரு சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேவேளை ஏனைய இருவரில் ஒருவர் வெளிநாடொன்றுக்கு தப்பி சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் , மற்றைய நபரை கைது செய்வதற்கு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.