காத்தான்குடி பாடசாலைக்கு ஜப்பான் அரசாங்கம் 12.6 மில்லியன் நிதி உதவி


காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சிற்றுண்டிச்சாலை புனரமைப்பு: ஜப்பான் அரசாங்கம் ரூபா 12.6 மில்லியன் நிதி உதவி வழங்கியுள்ளது.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அதன் சிற்றுண்டிச்சாலை கட்டிடத்தை மீள்புனரமைப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் ரூபா 12.6 மில்லியன் நிதியுதவியை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது.

இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் 'மானிட பாதுகாப்புக்கான அடிமட்டத் திட்டங்களின்' கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் இன்று கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கையெழுத்தானது.

இந்த புனரமைப்பு திட்டத்தை ஜப்பானிய தூதரகம் காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் எம்.ஐ.எம். தையூப் ஆகியோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

• நிதி ஒதுக்கீடு: ரூபா 12.6 மில்லியன்.

• நோக்கம்: மாணவர்களின் சுகாதார மற்றும் போசாக்குத் தேவைகளை உறுதிப்படுத்தும் வகையில் நவீன சிற்றுண்டிச்சாலை வசதிகளை ஏற்படுத்துதல்.

• நடைமுறைப்படுத்தல்: காத்தான்குடி பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் (MPCS)

கடந்த 2025 ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரவூப் ஏ. மஜீத் மற்றும் முன்னாள் செயலாளர் சபீல் நளீமி ஆகியோரின் அழைப்பின் பேரில் ஜப்பான் தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, ஜப்பான் தூதரகம் இந்த நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்டோர்

இந்த ஒப்பந்தக் கைச்சாத்திடும் நிகழ்வில் பின்வரும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்:

• எம்.என்.எம். பௌசான் (காத்தான்குடி மத்திய கல்லூரி பிரதியதிபர்)

• ரவூப் ஏ. மஜீத் (காத்தான்குடி சம்மேளன பிரதித் தலைவர்)

• எம்.வை.எம். ரமீஸ் (பழைய மாணவர் சங்கப் பிரதிநிதி)

"இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவின் அடையாளமாக இந்த உதவி அமைந்துள்ளது. இத்திட்டம் எமது மாணவர்களின் சுகாதாரமான உணவுப் பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும், சிறந்த கற்றல் சூழலை உருவாக்கவும் பெரிதும் உதவும்" என பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள் மற்றும் காத்தான்குடி பொதுமக்கள் சார்பில், இந்த மகத்தான உதவிக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பழைய மாணவர் சங்கம் - காத்தான்குடி மத்திய கல்லூரி தெரிவித்துள்ளது.