தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில் இருந்து விலக முயற்சிக்கிறது. அரசியல் நோக்கமின்றிய வகையில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, நிமல் சிறிபாலடி சில்வா, லசந்த அழகியவன்ன, ஜீ.எல்.பீரிஸ், அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடினார்கள்.
இந்த கலந்துரையாடிலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜி.எல்.பீரிஸ்,
மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள மோதல் நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தற்போது எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூகக்கட்டமைப்பில் ஏற்படும் விளைவுகளை அரசாங்கம் ஆராயவில்லை.
தற்போதைய இக்கட்டான நிலையில் சகல எதிர்க்கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். எதிர்க்கட்சிகள் வலுவாக செயற்பட்டால் தான் அரசாங்கத்தை சிறந்த முறையில் வழிநடத்தலாம். ஆகவே சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம் என்றார்.











.jpg)

