கைதியின் பணத்தில் சொகுசு வாழ்க்கை - சிக்கிய பொலிஸ் அதிகாரி



ஹெரோயின் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி, 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிகப் பணத்தை மோசடியாகப் பெற்ற குற்றச்சாட்டில் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள், குறித்த வங்கி அட்டையிலிருந்த பணத்தைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் ஒன்றையும், ஒரு சுப்பர் மார்க்கெட்டில் பல பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் விரைவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் மேற்பார்வையில், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேராவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.