மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ; உயிர் தப்பிய பெண்ணின் நேரடி வாக்குமூலம்


மட்டக்களப்பில் மயக்கமருந்து கொடுத்து கிணற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பிய பெண் தனது அனுபவத்தை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது,

சம்பவ தினத்தில் காலை 10.30 மணியளவில் வவுணதீவு சந்தியில் தனது குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தபோது, ஒரு முச்சக்கர வண்டி வந்ததாகவும், அதில் ஏறுமாறு சாரதி கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பணம் இல்லையென கூறியபோது 100 ரூபா எனக் கூறியதால், அவர் குழந்தையுடன் முச்சக்கர வண்டியில் ஏறியதாகவும், அங்கு மற்றொரு வயோதிபப் பெண்ணும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர், முச்சக்கர வண்டியில் பயணம் செய்தபோது, அந்த வயோதிபப் பெண் மட்டு. போதனா வைத்தியசாலையில் இறங்கியதாகவும், அதன் பின்னர் தன்னை புடவைக்கடை வீதியில் இறக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது முச்சக்கர வண்டியில் இருந்த மற்றொரு பெண், “சாரி எடுக்க போகிறேன், ஆட்டோவில் வருங்கள்” என கூறியதாகவும், அதன்படி அவர் நகைக் கடைக்கு சென்று தங்க மோதிரத்தை மீட்டுக் கொண்டு மீண்டும் அந்த இடத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர், அந்தப் பெண் மற்றொருவருடன் தொலைபேசியில் பேசி, மணிக்கூட்டு கோபுரம் பகுதிக்கு வருமாறு கூறியதாகவும், அங்கு மீண்டும் முச்சக்கர வண்டியில் ஏறியதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின் பொதுச்சந்தை வீதி வழியாகச் சென்று, சிறிது நேரம் நிறுத்தி, பின்னர் பிரதான பஸ் தரிப்பு நிலையம் வழியாக வவுணதீவு நோக்கி பயணித்ததாகவும் கூறியுள்ளார்.

வலையிறவு பாலம் அருகே செல்லும் போது, அந்தப் பெண் தனக்கும் தனது குழந்தைக்கும் பச்சை நிற ஜூஸ் கொடுத்து, தமக்கு விளாம்பழ ஜூஸ் கொடுத்ததாகவும், அதை குடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கியதாகவும், அதன் பின்னர் ஒரு இளைஞன் கத்தி உடன் முச்சக்கர வண்டியில் ஏறியதாகவும் கூறியுள்ளார்.

அதன்பின்னர் பயணம் தொடர்ந்தபோது, தாம் திடீரென மயக்கமடைந்ததாகவும், அதன் பின்னர் நீரில் மூழ்கிய நிலையில் விழித்ததாகவும், கிணற்றில் இருந்து கயிறு மூலம் யாரோ தன்னை மீட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பலமுறை மூழ்கி மீண்டபோது “அம்மா” என்று கத்தி உதவி கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.