மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு


நாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி இன்று திங்கட்கிழமை (30) வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்;

அனைத்து அரச மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்களிலும் மாலை 3 மணிக்கு அனைத்து ஏசிகளும் அணைக்கப்படவேண்டும். தனியார் துறையினரும் இதனைக் பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இரவு 8 மணிக்குப் பின்னர் வர்த்தக விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சார விளக்குகள் மற்றும் திரைகள் அணைக்கப்படவேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்களினால் நிர்வகிக்கப்படும் வீதி விளக்குகளை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அணைத்து வைப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

100 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரிய விழாக்களை நடத்தும்போது, தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.