மத்திய கிழக்கு நெருக்கடியால் யூரியா உர விநியோகத்தில் கட்டுப்பாடு: நெற்செய்கைக்கு மாத்திரம் முன்னுரிமை !


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலையினால் நாட்டுக்குள் யூரியா உரத்தின் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் , நடப்பு சிறுபோக நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, 2026ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் கலக்கப்படாத யூரியா உரத்தை, விவசாய சேவை நிலையங்கள் ஊடாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாட்டின் அனைத்து விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உரங்களை விநியோகிக்கும்போது, ஒவ்வொரு விவசாயியும் பயிரிடும் நிலப்பரப்பின் அளவுக்கு ஏற்ப, தேவையான அளவு உரத்தை மாத்திரம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள உரக் கையிருப்பைச் சரியாக முகாமைத்துவம் செய்து, 2026 சிறுபோக நெற்செய்கை எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.