அதிகக் கட்டணம் வசூலித்த 80 பேருந்துகள் சிக்கின


புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 680 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதன் நடமாடும் பேருந்து பரிசோதனை பிரிவின் பிரதானி ரோஹண வத்தகே தெரிவித்தார்.

இதன்போது, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 80 பேருந்துகள் கண்டறியப்பட்டதுடன், மேலதிகமாகப் பெறப்பட்ட பணம் மீண்டும் பயணிகளுக்கே பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அத்துடன், குறித்த பேருந்து நிர்வாகங்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதன்படி, நேற்று (18) ஒரு நாளில் மட்டும் சுமார் 150 பேருந்துகள் சோதனையிடப்பட்டதுடன், அவற்றில் அதிக கட்டணம் வசூலித்த 12 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டதாக ரோஹண வத்தகே மேலும் தெரிவித்தார்.

பேருந்துகளைச் சோதனையிடும் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக ஹைலெவல் வீதியின் ஹங்வெல்ல, கலுஹக்கல பகுதியில் பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.