நாகப்பட்டினம் அருகே இரண்டு மைல் தொலைவில் தத்தளித்த பயணிகள் கப்பல் பாதுகாப்பாக மீட்கப்பட்டது !


இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பயணிகள் கப்பல் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டது.

குறித்த கப்பல் நான்கு மணிநேரத்தில் நாகப்பட்டினத்தை அடைய வேண்டியிருந்தாலும், கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக பல மணி நேரம் தாமதமானது.

இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, 144 பயணிகளுடன் சென்ற கப்பல் நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தூரத்தில் உள்ள கள்ளார் பகுதியில் சென்றபோது இயந்திரத்தில் திடீர் பழுது ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் கப்பல் மெதுவாக இழுத்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவத்தில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் இடையிலான இந்த பயணிகள் கப்பல் சேவை, இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.