மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு :நாளை முதல் நடைமுறை!

 

நடப்பு ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை, 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் பிரிவினருக்கு 18 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை செய்திகள்

இந்த புதிய கட்டண உயர்வு நாளை திங்கட்கிழமை (11) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்திக்கான செலவு உயர்ந்துள்ளதால், இந்த கட்டண அதிகரிப்பு கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின் பாவனையாளர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்க எழுத்துப்பூர்வமாகச் சம்மதித்துள்ளது.

இந்த மானியத்தின் காரணமாக, இலங்கையிலுள்ள 95 சதவீதமான மின் பாவனையாளர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. குறிப்பாக, வீட்டுப் பிரிவில் 0 முதல் 180 அலகுகள் வரை பயன்படுத்துவோரின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

அதேநேரம், 181 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி,

210 அலகுகள்: தற்போதுள்ள 9,570 ரூபாய் கட்டணம், 1,760 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 11,330 ரூபாவாக உயரும்.

240 அலகுகள்: தற்போதுள்ள 12,120 ரூபா கட்டணம், 2,210 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 14,330 ரூபாவாக உயரும்.

270 அலகுகள்: கட்டணம் 2,660 ரூபாவால் அதிகரிக்கப்படும்.

300 அலகுகள்: கட்டணம் 3,110 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தக் கட்டண உயர்விற்குப் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.