தமிழ் மக்கள் ப டு கொ லைக ளுக்கு நீதி வேண்டும் , சர்வதேசமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இ. சிறிநாத்


தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா இ.சிறிநாத் தெரிவித்தார்.

தமிழின படுகொலை வாரமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காவது நாளான வியாழக்கிழமை (14) கொட்டும் மழையிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்தாதேசிய பாடசாலைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் கஞ்சி வழங்கலும் நடைபெற்றது.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் மற்றும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்காக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் அவலத்தினை குறிக்கும் வகையிலான கஞ்சி வழங்கப்பட்டது.கொட்டும் மழையிலும் மக்கள் இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

எங்களுடைய தமிழ் இனம் இன அழிப்பு செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அந்த நாளை நினைவு கூறுகின்ற முகமாகவும், கொல்லப்பட்ட உறவுகள் ஆன்ம விடுதலைக்காகவும், எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு எவ்வாறு தமிழ் மக்களுக்கான இனப்படுகொலை திட்டமிட்ட வகையிலே கொத்தணி குண்டுகளால் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட நாளை அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இந்த நிகழ்வு அமைகின்றது.

அதற்கு அப்பால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்காகவும் நீதி வேண்டி இந்த சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசுக்கும் இந்த விடயம் காலங்காலமாக ஞாபகப்படுத்தப்பட்டு, தமிழர் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிச் செய்த மக்களை நினைவு கூறுகின்றோம். அந்த நெருக்கடியான சூழ்நிலையிலே தங்களுடைய விடுதலை போராட்டத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் உயிர்களை அர்ப்பணித்த மக்களை நினைவு கூர்ந்து, அடுத்த சந்ததிக்கு எங்களுடைய இனம் எவ்வாறு கடந்த காலங்களிலே கொல்லப்பட்டது என்ற செய்தியையும், இனப்படுகொலை செய்தியையும் சொல்லுகின்ற இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலே உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

அந்த அடிப்படையிலே உண்மையிலே நான் இந்த கிழக்கு இலங்கை இந்து குருமார் ஒன்றியத்திற்கும், அக்கரைப்பற்று பிரதேசத்திற்குரிய இந்து குருமார் ஒன்றியத்திற்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். உணர்வுபூர்வமாக தங்களுடைய சமய பணிகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காக அவர்களுடைய சேவையை பாராட்டுவதோடு, உண்மையாக அவர்களுடைய தன்னார்வ செயல்களுக்கு என்னுடைய அனுசரணையையும் ஒத்துழைப்பையும் வழங்கி அவர்களோடு பயணிப்பேன் என்ற உறுதிமொழியை கூறிக்கொண்டு, தமிழ் மக்களுக்கான நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.