2026 A/L பரீட்சை ஆகஸ்டில் நடத்த தீர்மானம் அநீதி.. உதய கம்மன்பில


2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த தீர்மானித்துள்ளமை இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கு இழைக்கும் அநீதியாகும். பரீட்சையை நடத்த தீர்மானித்துள்ள தினத்தை அரசாங்கம் பிற்போட வேண்டும் இல்லையேல் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியே வெளியானது.

இந்த ஆண்டு பரீட்சைக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக தோற்றுவதற்கு தீர்மானித்துள்ள மாணவர்களுக்கு 133 நாட்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி 178 முதல் 198 நாட்களுக்கு பின்னரே பரீட்சை நடத்தப்படும். ஆனால் இம்முறை 133 நாட்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றும் மாணவர்களுக்கும் போதுமான காலம் வழங்கப்படவில்லை. கடந்த 4 வருட காலங்களில் உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு 28 முதல் 32 மாத காலம் வழங்கப்படும். ஆனால் இம்முறை 21 மாத காலம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தில் அனைவருக்கும் சமவுரிமை மற்றும் அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பின் 12(1) பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு முதன்முறையாக தோற்றும் பரீட்சாத்திகளுக்கும், இரண்டாம் மற்றும் மூன்றாம் முறையாக தோற்றும் மாணவர்களுக்கும் முரண்பாடான தன்மையில் காணப்படுகிறது.

திட்டமிட்ட வகையில் பரீட்சை உரிய தினத்தில் நடத்தப்படும் என்று பிரதி கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு போதுமான காலவகாசம் வழங்காவிடின் அது அரசியலமைப்பின் 12(1) பிரிவை மீறும் ஒரு செயற்பாடாக கருதப்படும்.ஆகவே மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யலாம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யலாம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் இவ்வாறான பிரச்சினை ஒன்று தோற்றம் பெற்றது. மாணவர்களுக்கு போதுமான காலவகாசம் வழங்காமல் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்தில் உள்ள பிரச்சினை மற்றும் சட்ட சிக்கலை சுட்டிக்காட்டி ஊடக சந்திப்பை நடத்தினேன்.அதன் பின்னர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்குத் தொலைப்பேசியில் அழைப்பு எடுத்து வழக்கு தாக்கல் செய்தால் மாணவர்கள் தான் நெருக்கடிக்குள்ளாகுவார்கள். ஆகவே இதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சராக சுசில் பிரேமஜயந்தவுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுங்கள் என்றார்.

இதன் பின்னர் அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த என்னுடன் தொடர்புக் கொண்டு கலந்துரையாடி, பரீட்சைகள் திணைக்களத்துடன் பாராளுமன்றத்தில் கலந்துரையாடி பரீட்சை தினத்தை மாற்றியமைத்து பரீட்சையை பிற்போட்டார்.இதனால் எமக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. மாணவர்களே பயனடைந்தார்கள்.

இந்த அரசாங்கம் தன்னிச்சையான முறையில் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது. எவர் குறிப்பிடுவதையும் கேட்பதில்லை. மாணவர்களின் கல்வி விடயத்தில் அவ்வாறு இருக்க முடியாது. 2026 உயர்தர பரீட்சை தினத்தை பிற்போட வேண்டும்.இல்லையேல் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு செல்ல நேரிடும் என்றார்.