புதிய வைரஸ் காரணமாகவே டெங்கு பரவல் அதிகரித்துள்ளது - பிரதமர்


புதிய டெங்கு வைரஸ் ஒன்று பரவி வருவதன் காரணமாகவே நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புதிய வைரஸ் தாக்கத்தினால் டெங்கு பரவல் அதிகரித்த போதிலும், நாம் விசேட ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம். தற்போது அதன் பரவலில் ஓரளவுக்குக் குறைவு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டமே டெங்குவினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகரகம மற்றும் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் இதன் பரவல் அதிகமாகக் காணப்படுகிறது.

வீடுகளை விடவும் பொது இடங்கள், குறிப்பாக பாடசாலைகள், அலுவலக வளாகங்கள் மற்றும் பாழடைந்த வெற்று நிலங்களில் டெங்கு நுளம்புப் பெருகும் இடங்கள் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அந்த வெற்று நிலங்களில் ஏதேனும் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செல்லும்போது அதன் உரிமையாளர்கள் உரிமை கோரி வருகின்றனர்.

அத்துடன், கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இடங்களிலும் டெங்கு நுளம்புப் பெருக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார்.

தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, இன்றைய தினத்திலும் (27) நாட்டின் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது, சில அரச நிறுவன வளாகங்களுக்குள் நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.