உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - ஐக்கிய மக்கள் சக்தி


 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய மக்கள் சக்தி அதற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்னின்று உழைக்கும் எந்தவொரு பாதுகாப்புப் பிரிவுக்கும் எங்களது முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம். இந்த விசாரணைகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது தவறுகள் ஏற்படுமாயின், அதனைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எமது நாட்டில் நம்பகத்தன்மை மிக்க நீதிமன்றக் கட்டமைப்பு ஒன்று உள்ளது. இந்த விசாரணை விடயத்தில் யாருக்கேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் நீதிமன்றத்தை நாடித் தங்களது நியாயங்களை முன்வைக்க முடியும். எங்களது கட்சியைப் பொறுத்தவரை நாங்களும் எங்களது தலைமையும் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நிற்கிறோம்.

இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த பிரதான சூத்திரதாரி யார், இதனுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை அறிய வேண்டிய தேவை எமக்கு உள்ளது. இதற்கு எவரேனும் மிகச்சிறிய அளவிலாவது உதவி செய்திருந்தால் கூட, அவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம். இதுவே எங்களது கட்சியின் முக்கிய கொள்கையாகும்.

யாராவது ஒருவர் கைது செய்யப்பட்டவுடன், அந்தக் கைதில் இருக்கும் குறைபாடுகளைப் பற்றிப் பேசுவது எங்களது பொறுப்பல்ல. அப்படிக் கைது செய்யப்பட்ட நபருக்கு ஏதேனும் அநீதி நடந்திருந்தால், அவர் நீதிமன்றத்தை நாடி தகுந்த சான்றுகளுடன் அதனைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். தவறுகள் நடக்கும் பட்சத்தில் நாம் நிச்சயமாகப் பேசுவோம்.
ஆனால், தற்போதைய சூழலில் இந்த விசாரணைப் பணிகளுக்கு நாம் தகுந்த அவகாசம் வழங்க வேண்டும். நாம் இந்த விசாரணைகளுக்கு எதிராகவோ அல்லது கைதான ஒருவரைக் குறித்தோ பேச ஆரம்பித்தால், விசாரணைகளைச் சீர்குலைக்கப் பார்க்கிறோம் என்று எம்மீது பழி சுமத்துவார்கள். அது எங்களது நோக்கமல்ல, எமக்குத் தேவை உண்மையான இறுதித் தீர்வு மட்டுமே என்றார்.