மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன் கடற்றொழிலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மீனவர்கள்! - மீன்வளத்துறை எச்சரிக்கை


 மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், மீன்பிடி அனுமதி பெறாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், சட்டவிரோதமாக மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான 60 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தடையை மீறி தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச் சீட்டினைப் பெறாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.

மீன் பிடி தடைக்காலம் அமுலில் உள்ளபோது அனுமதிச் சீட்டு இல்லாமல் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் சோதனை செய்யப்பட்டு அனைத்து விசைப்படகுகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அனுமதியின்றி மீன் பிடிக்கச் சென்ற மீன்பிடி விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு முந்திக்கொண்டு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளது.

60 நாள் மீன்பிடி தடைக்காலம் அமுலில் இருந்ததால் ராமேஸ்வரம் - மண்டபம், பாம்பன் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் தற்போது மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றதால் பரபரப்பாக காணப்பட்டது.