ஜனாதிபதியின் கவனம் கைது விவகாரங்களில் அல்ல ; மக்களின் வாழ்வாதாரத்தில் இருக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச




அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு குறித்து மக்களுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, கைது, விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெளியிட்டுள்ள அறிக்கையில், பொலிஸ், குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) மற்றும் நீதிமன்றங்களை தாமே மேற்பார்வை செய்வது போன்று, பாராளுமன்றத்தில் கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே கருத்து தெரிவிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

"வழக்குகள் இருந்தால் சட்டம் தனது வழியில் செல்லட்டும். எந்த விசாரணையையும், எந்த சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்கு தீர்வு காண்பதே அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தூய்மையான ஆட்சியை வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசே தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதாகவும், அமைச்சர்கள் சிலர் பொறுப்புக்கூறாமல் செல்வம் குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவை தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக, கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதை விட, நாட்டின் பொருளாதார நெருக்கடி, உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஊழல் குறித்த மக்களின் கவலைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.