யாழ். தீவக பகுதியில் குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் : ஏழு சந்தேகநபர்கள் கைது!


யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை திருடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து 2300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வேலணை, புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் பண்ணையாளர்களின் மாடுகள் களவாடப்பட்டு, சட்டவிரோதமாக இறைச்சியாக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்திருந்தது.

அதேவேளை வீடுகளை உடைத்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை களவாடும் சம்பவங்களும் அதிகரித்து இருந்தது.

அது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏழு நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து 2300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.