தென்னை மட்டைகளுக்கு கீழ் மறைத்து மணல் கடத்திய சாரதி கைது



கிளிநொச்சியில் இருந்து தென்னை மட்டைகளுக்கு கீழ் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திங்கட்கிழமை (15) குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்த போது தென்னை மட்டைகளுக்கு கீழ் மணலை கடத்தி சென்றமை கண்டறியப்பட்ட நிலையில் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

பளை பகுதியிலிருந்து தென்னை மட்டைகளை ஏற்றி செல்வது போன்று, வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி மணலை ஏற்றி அதன் மேல் தென்னை மட்டைகளை பரவி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு நபர் ஒருவர் நீண்ட காலமாக கடத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து மணல் கடத்த பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.