செங்கலடியில் மின் கட்டண அதிர்ச்சி: மக்கள் பெரும் அதிருப்தி; மின்சார சபையின் அலட்சியமா?


(செங்கலடி நிருபர் சுபஜன்) 

மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட கடந்த மாதத்திற்கான மின்கட்டணப் பட்டியல்களைப் பார்த்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்துள்ளனர். 

வழக்கமான கட்டணங்களை விட பன்மடங்கு அதிகமாக, கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அப்பகுதி மக்கள் தங்களது கடும் அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

செங்கலடி சந்தை வீதி - செங்கலடி 01,02 பகுதியில் உள்ள பல வீடுகளுக்குமாக மாத்திரம்  இத் திடீர் கட்டண அதிகரிப்பு மின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அண்மையில் 18 வீத மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டணப் பட்டியல்கள் அந்த வரம்பை மீறி, அநியாயமான முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வழக்கமாக மாதம் 1,000 ரூபாய் மின்கட்டணம் செலுத்தும் ஒரு சாதாரண வீட்டிற்கு, இந்த மாதம் 20,000 ரூபாய்க்கும் அதிகமான கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வழக்கமாக 8,000 முதல் 10,000 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்தும் வீடுகளுக்கு, தற்போது 85,000 ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம்  வழங்கப்பட்டுள்ளது.

'அரசாங்கம் அறிவித்தது 18 வீத உயர்வு மட்டும்தான். ஆனால் எங்களுக்கு வந்திருக்கும் கட்டண பட்டியலை பார்த்தால் 1000 வீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. அன்றாட உணவிற்கே கஷ்டப்படும் நாங்கள், பல்லாயிரக்கணக்கில் மின்கட்டணம் செலுத்த எங்கே போவது?' என அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கேள்வி எழுப்புகின்றனர்.

முறையற்ற மீட்டர் வாசிப்பு (Erroneous Meter Reading)

மின்சார நுகர்வு அலகுகளை (Units) சரியாகக் கணக்கிடாமல், தவறான எண்களைப் பதிவிட்டதே இந்த திடீர் கட்டண உயர்விற்கு முக்கிய காரணமாகும் உன  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த திடீர் கட்டண உயர்வைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மின்கட்டணப் பட்டியலை வழங்கிய மீட்டர் கணக்கெடுப்பு ஊழியரிடம் (Meter Reader) இது குறித்து நியாயம் கேட்டுள்ளனர். 'வழக்கமாக வரும் தொகையை விட இது எப்படி இவ்வளவு அதிகமாக வர முடியும்? இதில் ஏதேனும் தவறு நடந்துள்ளதா?' என தமக்கு தெளிவூட்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும், மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய அந்த ஊழியர், மிகவும் அலட்சியமான முறையிலும் மனிதாபிமானமற்ற ரீதியிலும் பதிலளித்ததாக அப் பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

இவ்வளவு பெரிய தொகையைக் கட்டணமாக அச்சிடும் போது, அது சாத்தியமா என்பதை மின்சார சபை அதிகாரிகள் மறுபரிசீலனை செய்யாமல் பொதுமக்களிடம் நேரடியாக வழங்கியிருப்பது அவர்களின் பொறுப்பற்ற தனத்தையே காட்டுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலில், அன்றாட வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தவே செங்கலடிப் பகுதி மக்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில், மின்சார சபையின் இத்தகைய தவறான கட்டணப் பட்டியல்கள் எரியும் நெய்யில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

இந்தத் தவறான கட்டணங்களால் மக்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பல குடும்பங்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.

மக்களின் இந்த நியாயமான கவலையையும், பதற்றத்தையும் கருத்தில் கொண்டு, இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட வேண்டும்.

செங்கலடி பகுதியில் விநியோகிக்கப்பட்ட தவறான மின்கட்டணப் பட்டியல்களை உடனடியாகத் திரும்பப் பெற்று, மீட்டர்களை மறுபரிசீலனை செய்து, உண்மையான நுகர்வுக்குரிய சரியான கட்டணத்தை மக்களுக்கு வழங்க அரசு மற்றும் மின்சார சபை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.