திறைசேரி மோசடி - Free Lawyers அமைப்பு வௌியிட்ட அறிவிப்பு!


 திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டு தற்போது 8 மாதங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும், அது தொடர்பான எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சட்டவாக்க சபை தவறியுள்ளதாக 'Free Lawyers' அமைப்பு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த அமைப்பு, இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கைகளை அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரிலாவது சமர்ப்பிப்பது அனைத்துத் தரப்பினரினதும் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பிந்தைய கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில் இலங்கை தற்போது உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் நிபந்தனையின்படி, இதுவரை காலமும் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்டு வந்த அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவ பணிகள், திறைசேரியின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட 'பொதுக் கடன் மேலாண்மை அலுவலகம்' என்ற புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடன் முகாமைத்துவம் என்பது, அரசாங்கம் பெற்றுக்கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை உரிய நேரத்தில், சரியான தரப்பினருக்குத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் அவற்றின் அறிக்கைகளைப் பேணுதல் ஆகிய எளிய செயல்முறையாகும்.

இந்த உத்தியோகபூர்வ பொறுப்புகள் மத்திய வங்கியிலிருந்து திறைசேரிக்கு மாற்றப்படும் இடைமாறுகாலத்தின் போது, முறையான கட்டுப்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படாததால் இரு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, மோசடிக்காரர்கள் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இது வெறும் தொழில்நுட்பக் கோளாறு அல்ல என்றும், நிர்வாக அமைப்பில் உள்ள கடுமையான குறைபாடுகளின் நேரடி விளைவு என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஒரு அதிகாரியின் உயிரையே பலிவாங்கிய இந்தத் துயரச் சம்பவம், வெறும் நிதி இழப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதொன்றல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.