"சிறைக்குள் கைதிகள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை" – உதய கம்மன்பில குற்றச்சாட்டு


கைதிகளும் மனிதர்கள் என்று சிறைச்சாலைக்கு வெளியில் மதில் சுவரில் பெயரளவில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் சிறைச்சாலைக்குள் கைதிகள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை. சிறைச்சாலைக்குள் மலசலகூடத்துக்கு செல்வதற்கு கூட போட்டி நிலவுகிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் பாதுகாப்பு தரப்பின் பலவீனமான நிர்வாகத்தையே ஏற்படுத்தியுள்ளது.குறுகிய நேரத்தில் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலைக்குள் வெளியில் வராத பல கசப்பான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.சிறைச்சாலைக்கு வெளியில் மதில் சுவரில் ' சிறைகைதிகளும் மனிதர்கள்' என்று பெயரளவில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் சிறைச்சாலைக்குள் கைதிகள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை.

சிறைச்சாலைக்குள் பாரிய இடநெரிசல் காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்றுவதற்கு கைதிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை. மலசலகூடத்துக்கு செல்வதற்கும் கைதிகள் மத்தியில் போட்டி நிலவுகிறது.

சிறைச்சாலைக்குள் நிலவும் நெரிசல் நிலைமையும் இவ்வாறான மோதலுக்கு ஒரு காரணியாக அமைந்துள்ளது. ஆகவே கைதிகளின் எண்ணிக்கை மற்றும் பௌதீக வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக எடுக்க வேண்டும் என்றார்.