நீர்கொழும்பு கடலில் படகு விபத்து: ஒருவர் பலி - இருவர் மாயம்


நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போயுள்ள மேலும் இருவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து முன்னெடுத்து வரும் இந்த பாரிய தேடுதல் நடவடிக்கையில், விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கடலில் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் ஏனைய மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் தென்மேற்குத் திசையில் நிலவும் மழை மற்றும் பலத்த காற்றுடனான சீரற்ற வானிலை நிலைமை காரணமாக, யாழ்ப்பாணத்தின் காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி, மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்காரணமாக, மேற்குறிப்பிட்ட கடற்பகுதிகளில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகள் மறுஅறிவித்தல் வரை மீன்பிடிக்காகக் கடலுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்பதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்திருக்குமாறும், ஏற்கனவே கடலுக்குச் சென்ற படகுகள் ஏதேனும் இருப்பின் விரைவாகவும் பாதுகாப்பாகவும் கரைக்குத் திரும்புமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அறிவித்துள்ளார்.