வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி, மோட்டார் வண்டிகள் மீது தீவைப்பு

(கிருஸ்ணா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவில்; வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றின் மீது  தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.00மணியளவில் பெரியபோரதீவு, முனைத்தீவை சேர்ந்த மயூரன் என்பவரது முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றின் மீதே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியின் மேல் பகுதி எரிந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளின் மேல் பகுதியில் சிறு எரிவு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இளைஞர் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர் எனவும் அதன் காரணமாக ஏதாவது செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற ரீதியில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் அப்பிரதேச தகவலின்படி தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.