445 முறைப்பாடுகள் ; 280 பேர் கைது

- 10 பிரதான சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணை
- இன முறுகலை ஏற்படுத்தும் ஆயிரக் கணக்கான போஸ்டர்களும் மீட்பு


கடந்த வாரம் கண்டி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற இன கலவர தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் நேற்று (12) வரையில் வீடுகள், கடைகள் சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 445 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


பொலிஸ் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத்தகவலை தெரிவித்தார்.

கண்டியில் மட்டும் 423 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 19 மதஸ்லங்களும் உள்ளடங்குகின்றன. ஏனைய பிரதேசங்களில் சேதங்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இக்கலவரங்கள் தொடர்பில் மொத்தமாக 280 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, கண்டியில் மாத்திரம் 178 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 10 பிரதான சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் பயன்படுத்திய அலுவலகங்களில் இருந்து, இன முறுகலை ஏற்படுத்தும் ஆயிரக் கணக்கான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, 4 கணனிகளும் (CPU) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இக்கலவரத்தில் 19 மத ஸ்தலங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வாகன சேதம் தொடர்பில கண்டியில் மட்டும் 60 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, ஏனைய பகுதிகளிலிருந்து 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதன்போது தெரிவித்தார்.