
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு மார்ச்- 27 அன்று நாடு முழுவதும் உள்ள பல பாடசாலைகள், பொது நிறுவனங்கள், பொது நூலகங்கள் எனப் பல்வேறுபட்ட இடங்களில் சுவாமி விபுலானந்தரின் பிறந்த தின நினைவாக பல நிகழ்வுகள் நடந்த வண்ணமுள்ளன.
அந்த வகையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கிவரும் பேத்தாழை பொது நூலகத்தின் விபுலானந்தர் வாசகர் வட்டமும், பொது நூலக உத்தியோகத்தர்களும் இணைந்து கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற முன்பள்ளிகளில் பயிலுகின்ற மாணவர்களுக்காக சுவாமி விபுலானந்தர் எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி ஒன்றினை வியாழக்கிழமை நடத்தினர். 12க்கு மேற்பட்ட குழந்தைகள் இப்போட்டியில் பங்குபற்றினர் . தம் அழகு தமிழ் கிள்ளை மொழியில் முத்தமிழ் வித்தகரைப் பற்றி குழந்தைகள் பேசினர் .
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் உடன் இடம்பெற்றது. முதல் மூன்று இடங்களைப் பெற்ற குழந்தைகளுக்கு விசேட பரிசுகளுடன், போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வாழைச்சேனை பொது நூலகத்தின் நூலகர் திருமதி.கப்சா ஜெஸ்மின், பெற்றார்கள், விபுலானந்தர் வாசகர் வட்ட உறுப்பினர்கள், பேத்தாழை பொது நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .


















.jpg)


