மட்டக்களப்பு மக்களுக்கு எச்சரிக்கை! உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாய்ச்சல் குளமான உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை மற்றும் காடுகளில் பெய்துவரும் மழை நீரினால் உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகளும்  நான்கு அடிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக உன்னிச்சை நீர்பாசனக்குளத்தின் ஊடாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன் வவுணதீவு – உன்னிச்சை பிரதான வீதியினை ஊடறுத்தும் நீர் பாயும் நிலையேற்பட்டுள்ளதுடன், தாழ் நிலங்களில் உள்ள சில வீடுகளும் நீரில் முழ்கியுள்ளன.

இதேவேளை தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை தொடர்ந்தால் உன்னிச்சை குளத்திலிருந்து மேலும் அதிகளவான நீர் வெளியேற்றப்படும் தேவையுள்ளதாகவும் மட்டக்களப்பு நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.