இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டவர் கைது


(பாறுக் ஷிஹான்)

கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இக் கைது நடவடிக்கையானது இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதுடன் 34 வயதுடைய கணகர் வீதி தம்பிலுவில் 01 பகுதியை சேர்ந்த செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் இவ்வாறு கைதானவர் ஆவார்.

கைதானவர் கடந்த 2007 2008 2009 காலப்பகுதியில் இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.அத்துடன் தற்போது அவர் பொத்துவில்-மட்டக்களப்பு வழித்தட பேருந்து சாரதியாக செயற்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று பொத்துவில் பகுதியில் இருந்து வழமை போன்று கல்முனை ஊடாக மட்டக்களப்பிற்கு செல்லும் போது கல்முனை பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் காத்திருந்த குற்றப்பலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்ததுடன் அம்பாறைக்கு மேலதிக விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இதே வேளை கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனியபாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள முனையக்காடு பகுதியில் வைத்து அவரது வீட்டில் வைத்து இனிய பாரதி சுற்றி வளைக்கப்பட்டு புலனாய் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.அத்தடன் அவரது சகாவான சிவலிங்கம் தவசீலன் என்பவர் மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் வைத்து கைதானார். இவர்கள் இருவரும் 1979 ம் ஆண்டின் 48 ம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.