மட்டக்களப்பு - இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் திருமதி. விஜயபத்மினி கருணாநிதி அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா


இலங்கை திறந்த பல்கலைக்கழகம், மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் கல்விசாரா உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் திருமதி. விஜயபத்மினி கருணாநிதி அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா இன்று (26.05.2018) சனிக்கிழமை, திறந்த பல்கலைக்கழகம், மட்டக்களப்பு பிராந்திய நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் எந்திரி. A.D .கமலநாதன் சிரேஷட உதவிப்பணிப்பாளர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இவர் தமது உரையில், திருமதி. விஜயபத்மினி கருணாநிதி அவர்களின் சேவை நலனை நினைவு கூர்ந்ததுடன், மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் வளர்ச்சியில் அவரின் பங்கு மறக்க முடியாததும், வரலாற்றில் அழிக்க முடியாததுமாகும் என்று கூறினார்.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எந்திரி S.A. அரியதுரை அவர்கள் கலந்து சிறப்பித்தது, இவ் விழாவின் முக்கியத்துவத்தினையும், விழாவின் கதாநாயகியான திருமதி. விஜயபத்மினி கருணாநிதி அவர்களின் கடந்தகால சேவையின் மதிப்பினையும் வெளிப்படுத்தியது.

மேலும் இந் நிகழ்வில் திருமதி. விஜயபத்மினி கருணாநிதி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தலும்,  அவையோரின் கௌரவிப்பும் இடம் பெற்று, விழா இனிதே நிறைவு பெற்றது.