திருகோணமலையில் இன்று காணமல்போனோர் தொடர்பான சந்திப்பு


காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய ரீதியிலான நான்காம் கட்ட பொதுமக்கள் சந்திப்பு திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ளது.

திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமாக உள்ளதாக காணாமல்போனோருக்கான அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 12.30 வரை திருகோணமலையை சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்பங்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, பிற்பகல் 12.30 முதல் ஒருமணிவரை ஊடக சந்திப்பும், பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணிவரை சிவில் சமூக அமைப்புகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக காணாமல் போனோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் நிறுவனத் திட்டம் மற்றும் மூலோபாயங்களை பகிர்ந்து கொள்ள காணாமல்போன நபர்களின் குடும்பங்கள், சிவில் சமுக அமைப்புக்கள், காணாமற்போனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள், ஊடகங்களை காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களும் இதன்போது சந்திக்க உள்ளனர்.

முன்னதாக மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு முதலான மாவட்டங்களில் காணாமல்போனோருக்கான அலுவலகம் சந்திப்புக்களை நடத்தியிருந்தது.

இந்த சந்திப்புக்கள், காணாமல்போனோருக்கான அலுவலகத்தின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளில் இணைத்துக் கொள்ளப்படக்கூடிய பொதுமக்களின் கண்ணோட்டங்களை கேட்டறிய உதவுவதாக காணாமல்போனோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.