கல்முனை கடற்கரை சூழல் எழில்மிக்கதாக மாற்றியமைக்கப்படும்

(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன்)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை சூழலை அழகுபடுத்தி, எழில்மிக்கதாக பேணுவதன் மூலம் இப்பிரதேசத்தை, உல்லாசப் பயணிகள் வரக்கூடியதாக மாற்றியமைக்க முடியும் எனவும் அதற்கான முயற்சிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார்.

மீனவர்கள் தமது மீன்பிடித் தொழிலை சீராக முன்னெடுக்கும் வகையில் கடல் சூழலை ஒழுங்கமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கல்முனைப் பிராந்திய கடல் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, இன்று கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடல் மற்றும் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் கே.சிவகுமார், கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.ஏ.எம்.அஹ்சன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை சூழல் பாதுகாப்பு மற்றும் திண்மக்கழிவகற்றல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இவ்விடயங்களில் மேற்படி இரு அரச நிறுவனங்களும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.