உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட மீனவரின் சடலம்




வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள சம்புக்களப்பு எனும் காட்டுப் பகுதியில் இளம் குடும்பஸ்தரான மீனவர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலடங்கும் அம்பந்தனாவெளி எனும் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி வசந்தராசா (வயது 36) என்பவரின் சடலமே சம்புகளப்பு பகுதியில் காட்டு மரத்தினிடையே தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்றும் கடந்த புதன்கிழமையிலிருந்து 09 காணாமல் போயிருந்தார் என்றும் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தைச் சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.