கல்முனையில் 14 வயது மகள் துஷ்பிரயோகம் : உடந்தையாக இருந்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு விளக்கமறியல் !


(பாறுக் ஷிஹான்)


கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக துஷ்பிரயோகம் செய்தமைக்காக சிறுமியின் தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலனான சந்தேக நபர் (50 வயது) ஆகிய இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்றது.

சம்பவம் நடந்து மூன்று மாத காலமாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் (IMO /WHATSAPP) ஊடாக தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்த, திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆண்பிள்ளை மற்றும் 14 வயது பெண்பிள்ளை என 2 பிள்ளைகள் உள்ளனர்.

குறித்த பெண் சமூக வலைத்தளத்தின் ஊடாக தொடர்புகொண்ட சந்தேக நபரை சந்திக்க, தனது 14 வயது மகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு நற்பிட்டிமுனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அப்பெண் சந்தேக நபரை சந்தித்ததோடு, தாயும் பிள்ளையும் தங்குவதற்காக வாடகைக்கு வீடொன்றினை கிராம சேவகரின் உதவியால் பெற்று, அங்கு தங்கியிருந்துள்ளனர்.

அந்த வாடகை வீட்டில் தங்கியிருந்தபோதே தாய் மற்றும் சிறுமி ஆகிய இருவருடனும் சந்தேக நபர் தகாத உறவு கொண்டதாகவும் அவ்வேளை சிறுமி அபயக்குரல் எழுப்பியபோது தாயின் ஒத்துழைப்போடு சந்தேக நபர் சிறுமியை மேலும் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய செயற்பட்ட பொலிஸார், தலைமறைவாகிவந்த சந்தேக நபரை சுமார் 3 மாதங்களின் பின்னர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் கடந்த 3ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

பின்னர், தொடர் விசாரணை நடத்தப்பட்டு பிரதான சந்தேக நபர் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வெளிமாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் வைத்திய பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.