வீதியால் சென்ற மாணவி மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த இளைஞர்கள் இருவருக்கு விளக்கமறியல்

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும், எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 10ஆம் திகதி, பாடசாலை முடிந்து வீதியால் சென்ற மாணவியின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற மேற்படி இரு இளைஞர்கள், மாணவி மீது பாலியல் சேட்டை புரிய எத்தனித்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோரால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த இரு இளைஞர்களும் பொலிஸாரால்   (17) கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்களை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் வே. சிவக்குமார் முன்னிலையில் நேற்று ஆஜர்செய்தபோது, எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.