புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவம்




பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தீமிதிப்பு உற்சவத்துடன் இனிதே நிறைவுபெற்றது

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அம்மன் ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இன்று மாலை நடைபெற்றது.

இலங்கையில் உள்ள அம்மன் ஆலயங்களுல் அதிகளவில் பக்தர்கள் தீமிதிப்பில் கலந்துகொள்ளும் ஆலயமாக புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயமாக விளங்குகின்றது .

கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலும் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு ஆரம்பமானது.

ஆலய உற்சவ காலங்களில் திருச்சடங்கு சிறப்பாக நடைபெற்று 05ஆம் திகதி புதன்கிழமை கல்யாணக்கால் வெட்டும் வைபவம் மிக சிறப்பாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று மாலை மட்டக்களப்பு வாவியில் அன்னையின் சமுத்திர நீராடும் நிகழ்வு நடைபெற்று அம்பாள் ஊர்வலமாக வந்து தீக்குளி காவல் செய்யப்பட்டு தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தீமிதிப்பு உற்சவத்தில் சுமார் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட அடியார்கள் கலந்துகொண்டதுடன் தீயில் இறங்கி தமது நேர்கடன்களை செலுத்திகொண்டனர்.

இந்த தீமிதிப்பு வைபவத்திற்கு இலங்கையில் பல பாகங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதந்து தமது வழிபாடுகளையும் நேர்கடன்களையும் நிவர்த்தி செய்துகொண்டனர் .