இன்று அதிகாலை முதல் தாந்தாமலை முருகன் ஆலயம் நோக்கி பக்தர்கள் படையெடுப்பு



(செ.துஜியந்தன்)

கிழக்கில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த தீத்தோற்சவம் நாளை நடைபெறவுள்ளது.

இதனையிட்டு இன்று(14) மண்முனைப் பாலம் ஊடாக பெருமளவிலான முருகபக்தர்கள் தாந்தாமலை முருகன் ஆலயத்தை நோக்கி பாதயர்த்திரை மேற்கொண்டுவருகின்றனர். கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறு சிறு குழுக்களாக இணைந்து கொண்ட முருகபக்தர்கள் பலர் தாந்தாமலை முருகனை தரிசிக்க சென்றுகொண்டிருக்கின்றனர். 

இன்று அதிகாலை தொடக்கம் மண்முனைப்பாலம் ஊடாக அதிகமான பக்தர்கள் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. கிழக்கில்; காடும் காடுசார்ந்ததும் மலையும் மலைசார்ந்ததும், வயலும் வயலும் வயல்சார்ந்ததுமான அழகியதொரு வனப்புமிக்க பிரதேசமாக தாந்தாமலை அமைந்துள்ளது.

மிகத்தொன்மையான ஆலயங்களில் ஒன்றாக தாந்தாமலை முருகன் ஆலயம் விளங்குகின்றது. இவ் ஆலயம் கூத்திகன் -சேனன், உலகநாச்சி, ஆடகசவுந்தரி, குளக்கோட்டன் ஆகியோருடன் தொடர்புபட்டு நிற்பதை வரலாற்றுச் சான்றுகளும், கர்ணபரம்பரைக் கதைகளும் சான்றுபகர்கின்றன. 

தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. நாளை நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.