த.தே.கூ உள்ளுராட்சி உறுப்பினர்கள் மஹிந்தவைச் சந்திதார்கள் என்ற செய்தி ஊடகம் உட்பட அனைவரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது



மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துள்ளார்கள் என்று வெளியாகியுள்ள செய்தி மூலம் ஊடகங்கள் உட்பட மஹிந்த தரப்பினர் பலரும் ஏமாற்றப்பட்டுள்ளனரே தவிர அவரைச் சந்தித்தவர்கள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்ததாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய செய்தியொன்று வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தில் உள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவ்வகையிலே இச்செய்தி ஒரு பிழையான செய்தியாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இவ்வாறானதொரு பிளவுகள் ஏற்பட்டுள்ளன என்கின்ற செய்தி ஒரு முக்கியத்துவம் பெறக்கூடிய செய்திதான். ஆனால், இந்தச் செய்தி பலரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதே தவிர எவ்வித உண்மைத் தன்மையும் கொண்டதல்ல. அந்தவகையில் வருகை தந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே என நம்பிக்கொண்ட மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார். அத்தோடு மட்டுமல்லாது அவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதற்குமேலாக ஏமாற்றப்பட்டுள்ளார். இதை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இத்தனை உறுப்பினர்கள் கட்சிக்குத் தெரியாமல் மஹிந்த அவர்களைச் சந்தித்துவிட்டார்கள் என்பதை நம்பிக் கொண்டு உண்மையில் அவ்வாறானதொரு நிகழ்வு நடைபெற்றிருந்தால் எவ்வித முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்குமோ அதே முக்கியத்துவத்தைக் கொடுத்து அந்தச் செய்தியை வெளியிட்டுள்ள ஊடகங்களும் உண்மையில் ஏமாற்றப்பட்டுள்ளன.

எனவே இவ்விதம் தம்மைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்று சொல்பவர்கள் தொடர்பில் ஊடகங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு செய்தி கிடைகின்ற போது கட்சியின் தொடர்புடைய முக்கியஸ்தர்களை தொடர்புகொண்டு இவ்வித செய்தியை உறுதிப்படுத்துவது ஊடகங்களின் பொறுப்புணர்வையும், நம்பகத் தன்மையையும் பெறுமதியுள்ளதாகச் செய்யும்.

எனவே வந்துள்ள செய்தி மூலம் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் என்பதே வெளிப்படையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் இவ்விதம் நடந்துகொள்ளவில்லை என்கின்ற செய்தியை மக்களுக்கு உறுதிப்படுத்தி வழங்குகின்றோம் என்று தெரிவித்தார்.