வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வாசஸ்தலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு



மட்டக்களப்பு மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க புகையிரத நிலைய ஒழுங்கையானது துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றமையால் அப்பாதையில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வாசஸ்தலம் ஒன்று முற்றாக உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைக் சுட்டிக்காட்டி மேற்படி கட்டிடத்தினை வேறு ஒரு இடத்தில் புதிதாக அமைப்பதற்கான நிதியைப் பெற்றுத் தருமாறு மாநகர முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் துரித கிராம அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியிலாளர் திருமதி.கலைவாணி வண்ணியசிங்கம்,  பொறியியலாளர் பத்மராஜா, மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கான வே.தவராஜா, ம.ரூபாகரன், இவேட்டின் சந்திரகுமார், சீ.ஜெயந்திரகுமார், திருமதி குஜாஜினி பாலகிருஸ்ணன் ஆகியோருடன் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

முதல்வர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் புகையிரத ஒழுங்கை வீதியானது மிகவும் ஒடுக்கமான வீதியாக காணப்பட்டது. இதனால் பல வருடகாலமாக மக்கள் போக்குவரத்து ரீதியாக பல அசௌகரியங்களை எதிர்நோக்கினர். இவ் வீதியால் செல்லும் பயணிகளில் குறிப்பாக பெண் பயணிகளுக்கு ஒரு பாதுகாப்பற்ற சுழ்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வீதியின் நிலையினை ஆராய்து பல வழிகளின் ஊடாக முயற்சித்து அபிவிருத்தி செய் முற்பட்ட போதும் அது சாத்தியக் குறைபாடாவே காணப்பட்டது. காரணம் வீதியின் மருங்கில் காணப்படும் மாகாண அதிகாரத்திற்கு உட்பட்ட பாடசாலை வளாகம், மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாசஸ்தலம் மற்றும் புகையிரத நிலைய வளாகம் போன்றனவாகும்.
 
இருப்பினும் புகையிரத திணைக்களத்திடம் பல வேண்டுகோள்களை விடுத்து குறித்த அமைச்சுடன் பேசியதன் பலனாகவும், வீதி அதிகார சபைக்கு மாற்றீடான கட்டிடம் அமைத்து தரும் முயற்சி கைகூடியதன் பலனாகவும். இவ் வீதியினை அபிவிருத்தி செய்யும் பணி சாத்தியமாகியுள்ளது. இவ் வீதியானது அகலமாக்கப் படுவதனால் நகரத்தினுடைய பிரதான வீதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலினை கணிசமான அளவு குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.