டெங்கு இரத்தப் பரிசோதனைக்கு கட்டண நிர்ணயம்!


டெங்கு நோய் தொடர்பான இரத்தப் பரிசோதனை மற்றும் ஏனைய மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டண அறவீடு வரையறை செய்யப்படவுள்ளது.

நுளம்புகள் பெருக்கத்தினால் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கத்தினைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அடுத்த ஆண்டு முதல் முழுமையான இரத்தப் பரிசோதனை (Full blood count) மற்றும் NS1 (Dengue Antigen Test) ஆகியவற்றுக்கு இந்த கட்டண நிர்ணய அறவீட்டு முறை அமுல்ப்படுத்தப்படும் என்று டெங்கு நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் அநுர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விலை நிர்ணயத்தை அனைத்து தனியார் வைத்திய சாலைகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கட்டண நிர்ணயத்தை அடுத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் தரம் குறைவடையக் கூடாது அத்தோடு சேவைகளும் தரமுள்ளதாக அமைய வேண்டும்.

சில பரிசோதனைகளுக்காக சிலர் அதிக கட்டணத்தை அறவிடுகின்றமையும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. NS1 (Dengue Antigen Test) பரிசோதனைக்காக 2350 ரூபாவில் இருந்து 2400 ரூபா வரையில் கொழும்பில் உள்ள 2 வைத்திய சாலைகளில் அறவிடப்படுகின்றது. ஆனால் முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு 600 ரூபா மட்டுமே அறவிடப்பட வேண்டும்.

இலங்கையில் இந்த வருடம் நவம்பர் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,561 ஆகும். கடந்த வருடத்தில் 4,537 ஆகும். சமீபத்திய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக டெங்கு நுளம்புகள் வெகுவாக அதிகரித்திருப்பதாக டெங்கு நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் அநுர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.