மட்டு மாவட்டத்தில் 100 நாட்களுக்குள் 07 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன ! - வியாழேந்திரன்


(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நூறு நாட்களுக்குள் ஏழு பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் தேசியப்பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட இருக்கின்றது. இதில் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலமும் உள்வாங்கப்படும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான வியாழேந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

பழுகாமம் கண்டுமணி மாகவித்தியாலயத்தின் இல்ல மெய்வலுநர் விளையாட்டுப்போட்டி அதிபர்.ஆ.புட்கரன் தலைமையில் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
எமது மாவட்டத்தில் கல்வி சார்ந்த பிரச்சினைகள் பலவுள்ளது அதனை நான் உரியவரிடம் முன்வைத்துள்ளேன். நாங்கள் முன்னைய அரசாங்கத்தில் பல முயற்சிகள் எடுத்தும் ஒரு பாடசாலையேனும் தேசிய பாடசாலையாக்க முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதி பிரதமருடனான கலந்துரையாடலின் பயனாக நூறு நாட்களுக்குள் ஏழு பாடசாலைகள் எமது மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட இருக்கின்றது. அதில் ஒன்றாக பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயமும் தரமுயர்வு பொறும். இதற்கான சிபாரிசினை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் என்ற ரீதியில் வழங்கியுள்ளேன். அடுத்த வருட விளையாட்டுப்போட்டியினை நீங்கள் பழுகாம் கண்டுமணி மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை என்ற பெயருடன் நடத்த முடியும் என இவ்விடத்தில் உறுதியளிக்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

உங்களுக்குத் தெரியும் தமிழர் செறிந்து வாழும் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 பாடசாலைகள்தான் தேசிய பாடசாலைகளாக உள்ளது. இந்த எண்ணிக்கை மற்றய சமூகத்துடன் ஒப்பிடுகையில் போதுமானதாக இல்லை. கடந்த ஆட்சிகாலத்தில் செங்கலடி மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு பாராளுமன்றத்தில் கதைத்தோம,; கல்வி அமைச்சர் அகிலவிராஜ் அவர்களின் காலடியில் சென்று 50 தடைவைகளுக்கு மேல் கதைத்தோம் முடியவில்லை. அந்த அரசாங்கம் எங்களின் பிடியில் தான்; இருந்தது நாங்கள் அசைத்தால் அரசாங்கம் அசையக்கூடிய நிலையில்தான் இருந்தது. ஆனால் முடியவில்லை.

அது மாத்தரமின்றி வரவுசெலவுத் திட்டம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் போன்றவற்றிக்கெல்லாம் எந்தவிதமான நிபந்தனையின்றி கையை உயர்த்தி அரசாங்கத்தினை காப்பாற்றி வந்தோம். நினைத்திருந்தால் காணி விடயம், அரசியல் கைதிகள் விடயம், அபிவிருத்தி விடயம் போன்ற பல விடயங்களில் நாங்கள் முன்னேற்றத்தினை அடைந்திருக்க முடியும். ஆனால் கேவலம் இந்த மாவட்டத்தில் கல்வியின் முன்னேற்றத்திற்காக ஒரு பாடசாலையேனும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்த முடியாத நிலையிலையே அரசாங்கம் இருந்து வந்தது.

இவ்வாறாக எமது உரிமையையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என்ற நிலையிலையே எமது கிழக்கு மாகாண தமிழ் சமூகம் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். மாறாக நாங்கள் வீகிதாசாரத்திலும் கிழக்கு மாகாணத்தில் குறைந்து கொண்டு வருகின்றோம் இவ்வாறானதோர் நிலை தொடர்ந்தால் எதிர்கால சந்ததியின் நிலை எவ்வாறு செல்லும் என்பதனை சிந்தித்து பாருங்கள்.

அரசியலில் மூன்று வகை அரசியல் இருக்கின்றது ஒன்று சராணகதி அரசியல் இது ஐயா என்று கொண்டு காலடியில் கிடப்பது. அடுத்து எதிர்ப்பு அரசியல் இதனையே நாங்கள் செய்து வந்தோம். இந்த அரசியலை நாங்கள் நம்பவில்லை காரணம் எமது உரிமையை வென்றெடுப்பதற்காக பலமான தலைமையூடாக விடுதலை போராட்டம் நடாத்தப்பட்டது. இதனையே நாங்கள் நம்பியிருந்தோம், ஆனால் 2009 ஆம் ஆண்டு அவ்வாறான நம்பிக்கைக்குரிய பலமான அந்த யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் இந்த எதிர்ப்பு அரசியல் சாத்தியமற்றதொன்றாகவே சென்றுள்ளது. நாங்கள் தற்பொழுது இராஜதந்திர அரசியலையே நாங்கள் கையாள வேண்டியுள்ளது. அதாவது எமது தேவைகளை முன்வைத்து எமது மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யக் கூடிய வகையில் எமது அரசியலை நாங்கள் முன்கொண்டு செல்லவேண்டும்.

எமது மக்களுக்கு உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நாங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும். வீடு இன்றி குடிசையில் வாழ்ந்த பெண்பிள்ளையை விசம் தீண்டி இறந்த சம்பவத்தினை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த தாய்க்கு வீட்டினை வழங்க முன்வந்தபோது இதனை நீங்கள் முன்கூட்டி வழங்கியிருந்தால் எனது பிள்ளையின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என்று அநத்தாய் கதறியழுத சத்தம் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இதுதான் எமது நிலைப்பாடாகும். என இதன்போது தெரிவித்தார்.