அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் அதிகரிக்கலாம்

அடுத்த இரண்டு வாரகாலத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அரசாங்கம் கூறுகின்றது. அதற்காகவேண்டி மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுதல் முகாம்கள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் அடுத்த இரண்டு வாரங்கள் சாவால் நிறைந்த காலமாகவே நாம் கருதுகின்றோம். இந்த இரண்டு வாரகாலத்தில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். முடிந்தளவு தனிப்பட்ட முறையில் மக்கள் தம்மை பாதுகாத்துகொள்ள வேண்டும். வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதே இவ்வாறான சூழலில் மக்கள் தம்மை  பாதுகாக்க முடிந்த சிறந்த செயற்பாடாகும். அதேபோல் சுகாதார துறையினர் எந்தவித தடைகளும் இல்லாது தமது சேவையை முன்னெடுக்க சுகாதார சேவையாளர்களுக்கு இடமளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் அவர்களுக்கு செய்து கொடுத்துள்ளது. மக்களின் பங்களிப்பும் இதில் அவசியம்.

மேலும் அடுத்த இரண்டு வாரகாலத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதுவதால் இப்போதே மருத்துவமனைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அவர்களை சிரமப்படுத்தாத வகையில் அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் எந்த விதத்திலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. சுகாதார பணிப்பகம் மற்றும் அரசாங்கம் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி தம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் நிலையில் வெகு விரைவில் நாட்டை எம்மால் இந்த சவால்களில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும். அதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.